''பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்கள், இதுவரை 42 ஆயிரம் பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,''என அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பள்ளி செல்லாமல் இடைநிற்கும் மாணவர்கள் பற்றிய கணக்கெடுப்பு, வீடுவீடாக நடக்கிறது. இதுகுறித்து கண்ணப்பன் கூறியதாவது:
படிப்பை இடைநிறுத்திய மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த 5ம் தேதி முதல் நடக்கிறது. சில மாவட்டங்களில், ஓரிருநாட்கள் தாமதமாகியிருக்கலாம். கடந்த 12ம் தேதி வரையான கணக்கெடுப்பில், தமிழகத்தில் 42 ஆயிரம் பேர், படிப்பை இடைநிறுத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மாநில அளவில் 85 ஆயிரம் கிராமங்கள் உள்ளன.
இந்த மாணவர்களை வருகிற ஜூன் மாதத்தில் பள்ளிகளில் சேர்த்து ஓராண்டு பயிற்சி அளித்து, அவர்களின் தகுதிக்கேற்ப வகுப்புகளில் சேர்க்கப்படுவர். அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், மாநிலம் முழுவதும், 5,100 நடுநிலைப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவில் மாணவர்கள் சேரும் பள்ளிகளில், அவர்களுக்கென தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.கணக்கெடுப்பில், மாணவர்கள் பள்ளி செல்லாமல் இடைநின்ற காரணங்கள் உட்பட பல்வேறு விவரங்களும் சேகரிக்கப் படுகிறது.
அவை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அனைவருக்கும் கட்டாய துவக்கக் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த பணி நடந்துள்ளது.இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.
No comments:
Post a Comment