தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்
பிரத்யேக நூலகம்
மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் அனைவரும் இடையில் நிற்காமல் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்க ஊக்கமளிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரும் நிதியை தமிழக அரசு, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் பிரித்து கொடுக்க அனுமதி வழங்கியது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தகுதியுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நிதி பிரித்து வழங்கப்பட்டது. இதில், ரூ.25 ஆயிரத்தை அறிவியல் கருவிகள் வாங்கவும், ரூ.5 ஆயிரத்தை மின்கட்டணம், போன், இன்டர்நெட் கட்டணம் வழங்கவும், ரூ.10 ஆயிரத்தை பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கவும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடக்கலாம் என்று புகார் எழுந்தது.
இதையடுத்து 9, 10ம் வகுப்பு மாணவர்கள், நாட்டு நடப்பு, அன்றாட செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்கள், விளையாட்டு, தன்னம்பிக்கை இதழ்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதற்காக வருட சந்தா கட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்காக தனியாக பிரத்யேக நூலகம் ஏற்படுத்தி அதில் தினசரி நாளிதழ்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் பொது அறிவு திறனும், வாசிப்பு திறனும் அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment