ஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என்பதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 6-வது ஊதியக் குழுவுக்கு முன்பு அதாவது 31-12-2005 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 – 125 – 7000 என்ற ஊதிய விகிதம்இருந்தது. 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி ரூ. 5,200 – 20,200 + தர ஊதியம் 2,800 என திருத்திய ஊதிய விகிதம் 1-1-2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒருநபர் குழு பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-8-2010 முதல் மாதம் ரூ.500 சிறப்புப் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புப் படியை ரூ. 750 ஆக உயர்த்தி தனி ஊதியமாக வழங்க 12-1-2011-ல் ஆணையிடப்பட்டது. 1-1-2011 முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.20,600 – 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி ஊதியம் ரூ.750-லிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 14,719 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டது. ஆனாலும் பல்வேறு தரப்பு ஊழியர்களின் நலன் கருதி அரசு இதனை ஏற்றுக்கொண்டது. அதோடு இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய இயலும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) பிறருடைய தூண்டுதலின்பேரில் கடந்த 23-ம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நானும், பள்ளிக்கல்வித் துறை செயலாளரும் அவர்களை அழைத்து பேசிய பிறகும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
READ MORE |
STUDY MATERIALS AND QP DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment