டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வு எந்தவிதச் சச்சரவும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. போட்டித் தேர்வுகளைத் திறம்பட நடத்துவதில் தனக்குள்ள நிபுணத்துவத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மீண்டும் ஒருமுறை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. இத்தேர்வாணையத்திற்கு வாழ்த்துகள்.
பொதுத்தமிழ் (அ) பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு/திறனறிவு என இரண்டு பகுதிகளைக் கொண்ட இத்தேர்வில், ஒவ்வொரு பகுதியிலும் சம மதிப்பெண்கள் கொண்ட நூறு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.
கேள்வித்தாளைப் பார்த்ததும், "எத்தனை எளிதாக இருக்கிறது!" என்ற எண்ணம் முதலில் தோன்றினாலும், மிக அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் என்பதால், 'கட் ஆஃப்' மதிப்பெண் வழக்கத்தை விட அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற ஆபத்தும் உள்ளது.
வினாத்தாளைத் தனித்தனியே பார்க்கும் முன், அதில் அரசியல் கலப்பு அநேகமாக அறவே இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். மாநில அரசுத் திட்டங்கள் தொடர்பான ஓரிரு வினாக்களும் 'ஏற்றுக்கொள்ளத்தக்க' அளவிலேயே இருந்தன.
பொதுத் தமிழ் / பொது ஆங்கிலப் பகுதி:
இப்பகுதி பெரும்பாலும் பள்ளிப் பாடத்திட்டத்தை ஒட்டியே அமைந்திருந்தது. பொதுத்தமிழைப் பொருத்தமட்டில், அகர வரிசைப்படி சொற்கள், சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், ஒற்றுப் பிழை சரி செய்தல், பிழையற்ற தொடர் காணுதல், எதிர்ச்சொல் கண்டறிதல் என நன்கு பழகிய பாதையிலேயே பயணித்தது.
வணிக மேலாண்மை தொடர்பான ஆங்கிலச் சொற்கள் மற்றும் வெவ்வேறு ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கம் முற்றிலும் தமிழ் வழியே பயின்ற கிராமத்துத் தேர்வர்களுக்குக் கடினமாக இருந்திருக்கக்கூடும். அந்த வகையில், பொது ஆங்கிலத் தாள், தமிழை விடவும் எளிதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. இத்தகைய கடினமான சொற்களைத் தவிர்த்திருக்கலாம்.
பொது அறிவு / திறனறிவுப் பகுதி:
அறிவியல், கணிதம், வரலாறு பகுதிகளில் 'நேரடிக் கேள்விகள்' மிகுந்து இருந்தன. ஆனால், பொருளாதாரம் மற்றும் சட்டங்கள் தொடர்பான வினாக்கள் சற்றே உயர் தரத்தில் இருந்தன. இவை, சிலருக்கேனும் ஓரளவுக்குக் கடினமாக இருந்திருக்கக்கூடும்.
குளோரோஃபார்ம், கண்ணீர்ப்புகை, உயிரினங்களில் கார்பன், மின்காந்தங்களில் காந்தப் பண்புகள் ஆகியன அறிவியல் அறிவுக்கு ஏற்ற கேள்விகள்.
கணிதப் பகுதிதான் உண்மையில் இத்தேர்வை மிக எளிமையாக்கியுள்ளது. ஆட்கள்-வேலை, விகிதாச்சாரம், சராசரி, வட்டி விகிதம் மீதான கேள்விகள் குறிப்பாக கிராமப்புறத் தேர்வர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்திருக்கும்.
பெட்டிகள், உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர், வண்ணப் பெட்டிகள், பெண்களின் பங்களிப்பு பற்றிய பத்தி அதனைத் தொடர்ந்து கேள்விகள், இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர் உள்ளிட்ட பல வினாக்கள் குரூப்-2 தேர்வர்களுக்கு மிகச் சாதாரணம். அதிலும், கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், தஞ்சாவூர் தொடர்பான கேள்வி அநியாயத்துக்கு எளிதானது!
சட்டங்கள், குறிப்பாக இந்திய சாசனம் தொடர்பான வினாக்கள், போட்டித் தேர்வுக்கு என்று சற்றேனும் தீவிரத்துடன் தம்மைத் தயார்படுத்திக்கொள்கிற தேர்வர்களுக்கு (மட்டுமே) எளிதாக இருந்திருக்கும். அவர்களுக்குமே கூட, முன்னுரிமை அட்டவணை வரிசையில் சரியான வரிசை ஒழுங்கு, அடிப்படைக் கடமையைக் கொண்டு வந்த சாசனத் திருத்தம், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், வெவ்வேறு ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு உள்ளிட்டவை சற்றே சவாலாக இருந்திருக்கக்கூடும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள், தேசிய சுகாதார சேவை, தேசிய விவசாய சந்தை, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு கிராமவாழ்விட மேம்பாடு இடம்பெயர்வு தொடர்பான வினாக்கள் மூலம், வினாத்தாள் தயாரிப்பில் காட்டப்பட்ட 'அக்கறை' நன்கு வெளிப்பட்டது.
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை பிறந்த நாள் கொண்டாட்டம், மகளிர் உரிமைத் தொகையின் நோக்கம், 'நம்மைக் காக்கும் 48' திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையின் உச்சவரம்பு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய குறிப்பிடத்தக்க எரிசக்தி ஆதாரம் ஆகியன மிகுந்த பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பாராட்டுக்கள்.
'தூய்மை இந்தியா இயக்கம்' என்று தூய தமிழில் தராமல், 'ஸ்வச் பாரத் மிஷன்' என்றும், 'நார்டிக்ஸ்' என்று ஆங்கில மொழியிலேயே ஏன் குறிப்பிட வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. இவையெல்லாம் தவறு இல்லை; ஆனால் தவிர்த்திருக்கலாம். மற்றபடி, ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில், பெரிய அளவு தவறு அல்லது பிழை ஏதும் இல்லை. வினாத்தாள் தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் நன்கு தெரிகிறது. ஆணையத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment